rfxsignals May 20, 2020 No Comments

கொரொனா நேரத்திலும் ‘அனு’வை மறக்காத சிவகார்த்திகேயன்

     சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளை புலியை சிவகார்த்திகேயன் தத்தெடுத்து உள்ளார்.

 

Sivakarthikeyan

 

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பல்வேறு நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார். கொரோனா பிரச்சனையை சமாளிக்க தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மக்கள் உதவ முன் வர வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் வைத்தபோது முதல் ஆளாக 25 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார் சிவகார்த்திகேயன்.

 

இந்நிலையில் தற்போது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளை புலிஒன்றைசிவகார்த்திகேயன் மீண்டும் தத்தெடுத்துள்ளார். 2018ல் முதல் முறையாக அனு என்ற வெள்ளை புலியை சிவகார்திகேயன் தத்தெடுத்தார். அதன் பிறகு அவர் அதை தொடர்ந்து அதன் பராமரிப்பு செலவினை ஏற்று கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது 2020 மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை நான்கு மாதங்களுக்கான பராமரிப்பு செலவினை சிவகார்த்திகேயன் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது..

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக, ‘விலங்கு தத்தெடுப்பு’ திட்டம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மக்கள் தங்களுக்கு பிடித்த விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் அளிக்கும் தொகைக்கு ஏற்றவாறு வரி விலக்கு 80 (ஜி)க்கான ரசீது, இலவச பூங்கா வசதிகள் போன்ற பல சலுகைகள் வழங்கப்படும்.

இணையதளம் மூலமாகவும் தத்தெடுத்து பணம் செலுத்தும் வசதி உள்ளது. நேற்று தமிழ் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் ‘அனு’ என்னும் வெள்ளை புலியை, மேலும், நான்கு மாதங்களுக்கு மே 2020 முதல் தத்தெடுத்துள்ளார். இவர் 2018ம் ஆண்டு முதல் இப்புலியை தத்தெடுத்து வருகிறார். இந்த புலி இங்கு உள்ள 14 வெள்ளைப்புலிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

தற்போது சிவகார்த்திகேயன் டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். டாக்டர் படத்தின் ஷூட்டிங் இன்னும் முடிக்கப்படாமல் உள்ள நிலையில், அது இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது என நேற்று செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. கொரோனா லாக்டவுன் முடிந்தபிறகு டாக்டர் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் கோவாவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

டாக்டர் படத்தில் யோகி பாபு, வினய் மற்றும் அர்ச்சனா ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். இதற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தினை ஆர்.ரவிக்குமார் இயக்குகிறார். இந்த சயின்ஸ் பிக்சன் படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ராகுல் ப்ரீத் சிங், ஈஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகிறது அயலான் படம்.

தற்போது கொரோனா லாக்டவுனில் சிவகார்திகேயன் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது சில விழிப்புணர்வு வீடியோக்களையும் அவர் வெளியிட்டு இருந்தார். கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக சிவகார்த்திகேயன் வெளியிட்டு இருந்த வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.